செந்தமிழ்சிற்பிகள்

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (1888 - 1972)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்  (1888 - 1972)

அறிமுகம் 

 

தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுபோன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர்.

1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.‘அரசவைக் கவிஞர்பதவியும், `பத்ம பூஷண்பட்டமும் பெற்றவர். சாஹித்ய அகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடாஎன்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது. முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

    ’கத்தி யின்றி ரத்த மின்றி

    யுத்த மொன்று வருகுது

    சத்தி யத்தின் நித்தி யத்தை

    நம்பும் யாரும் சேருவீர்

என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

புகழ் பெற்ற மேற்கோள்கள்:

    'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'

    தமிழன் என்றோர் இனமுன்று

 

    தனியே அதற்கோர் குணமுண்டு'

    'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'

    'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

    கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

படைப்புகளில் சில:

    மலைக்கள்ளன் (நாவல்)

    காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)

    பிரார்த்தனை (கவிதை)

    நாமக்கல் கவிஞர் பாடல்கள்

    திருக்குறளும் பரிமேலழகரும்

    திருவள்ளுவர் திடுக்கிடுவார்

    திருக்குறள் புது உரை

    கம்பனும் வால்மீகியும்

    கம்பன் கவிதை இன்பக் குவியல்

    என்கதை (சுயசரிதம்)

    அவனும் அவளும் (கவிதை)

    சங்கொலி (கவிதை)

    மாமன் மகள் (நாடகம்)

    அரவணை சுந்தரம் (நாடகம்)

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.

மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது.

இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது.

தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.